தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

கல்வெட்டுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வெட்டுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மார்ச், 2025

எல்லோரா – இந்துக் குடவரைகள்

 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறிய பற்பல எரிமலைகள்; அவற்றிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்புகள் உருகி ஓடி குளிர்ந்து ஏற்படுத்திய பள்ளங்கள்; இப் பெரு நிகழ்வுகளின் சான்றுகளாக, வெவ்வேறு குன்றுகளும், மலைகளும், மலைத்தொடர்களும், அவற்றிலிருந்து விழும் அருவிகளும், ஓடிவரும் ஓடைகளும், நதிகளும், இவற்றையெல்லாம் இணைக்கும் பள்ளத்தாக்குகளுமாக அந்த நிலப்பரப்பு காட்சியளிக்கிறது. நாங்கள் சென்ற பிப்ரவரி(2025) மாதத்தில்,  குளிரில்லை, அதிக வெப்பமுமில்லை. ஆனால், செடிகள் காய்ந்து, பெரும்பாலும் வறண்டு சில இடங்களில் மட்டுமே பசுமையாகத் தென்பட்டது.  மழைக்காலங்களில் இது முற்றிலும் வேறாக ஈரத்துடன், பசுமையுடனும் காட்சியளிக்கும் எனத் தோன்றுகிறது.  

சத்ரபதி சாம்பாஜி நகரிலிருந்து (பழைய பெயர் ஔரங்காபாத்) எல்லோராவுக்குப் போகும் வழியில் தென்படும் ஆல மரங்களும், வேப்ப மரங்களும் புதிய நிலப்பரப்பை பார்த்த திகைப்பிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்துகிறது.

எல்லோராவில் 100க்கு மேற்பட்ட குடவரைகள் இருக்கின்றன தொல்லியல்துறை, 34 குடவரைகளை நாம் பார்க்க வசதி செய்துள்ளது.

இங்கு

13 பௌத்த குடவரைகள் (எண் 1-13),

16 இந்து குடவரைகள் (எண்14-29),

5 சமணக் குடவரைகள் (எண் 30-34) உள்ளன.

இவைகள் ஓரு பெரிய மலை அல்லது மலைத்தொடரின் சரிவில் 2கிமீ க்கும் மேலான நீளத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில் (குடவரை எண் 16), இயற்கையின் வல்லமையை வெல்ல முயன்ற மனிதனின் கலைமனத்துக்குப் கிடைத்த மாபெரும் வெற்றி. முதலில் நமக்குத் தென்படுவது, ஒரு இரண்டு நிலை குடவரைக் கோபுரம். சற்று இருண்ட, நீளமான நுழைவாயிலைக் கடந்து சென்றால், ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் செல்லும் போது திடீரென்று மேலே ஆகாயம் திறந்து, வெளிச்சமும், காற்றும், வெப்பமும் நம்மை வருடும் ஒரு பரவசம், இங்கேயும் கிடைக்கிறது. ஒரு வித்தியாசம், இந்த திறந்த வெளி, இயற்கையானது அல்ல. நம் முன்னோர்கள், அங்கிருந்த பாறைகளை அகற்றி எற்படுத்தியது!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய கைலாசநாதர் கோயில், குடவரைக் கலையின் உச்சம் எனலாம். பொதுவாக ஒரு மலையை உட்புறமாக குடைந்து தூண்கள், மண்டபங்கள், கருவறைகள், சிற்பங்கள் என அமைப்பது வழக்கம். இத்தகைய குடைவரையின் மூன்று பக்கங்களும் பாறைகளால் தடுக்கப் பட்டிருக்கும். முன்பக்கம் வழியாகவே வெளிச்சமும், காற்றும், நாமும் சென்று வரமுடியும். உதாரணம், மண்டகப்பட்டிலுள்ள மகேந்திரவர்ம பல்லவனின் முதல் குடவரை.

செவ்வாய், 30 ஜூலை, 2024

ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்

இந்தத் தொடரின் முந்தைய பதிவுகள்


இந்தப் பதிவில்



1. ரிஷப குஞ்சரம்


ரிஷப குஞ்சரம் என்பது ரிஷபமும் யானையும் சேர்ந்த ஒரு சிறப்புச் சித்தரிப்பு. இதில் இரண்டின் தலைகளும் இணைந்திருக்கும். நாம் ரிஷபத்தின் உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த இணைந்த தலை ரிஷபத்தின் தலையாகத் தெரியும். நாம் யானை உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தத் தலை யானையின் தலையாகத் தெரியும். மிக நுட்பமான மற்றும் தந்திரமான சித்தரிப்பு. இதன் சிறப்புகளை இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

இந்தியா மற்றும் இலங்கையில் இது சிலைகளாக, சிற்பங்களாக, ஓவியங்களாக மற்றும் பண்டைய அரசாங்க நாணயங்களாகவும் காணக் கிடைக்கிறது. ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் இருக்கும்போது ஒரு சிற்பத்தைத் தேடுவது சிரமமே. இந்த ரிஷப குஞ்சர சிற்பத்தைச் சற்று சுலபமாக கண்டுபிடிக்க, குறிப்பாக எங்கிருக்கின்றன என்பதையும், இருக்குமிடத்தின் வரலாற்றுப் பின்புலத்தையும் முடிந்தவரை சேகரித்தேன்.

ஞாயிறு, 5 மே, 2024

கண்ட பேருண்டம்

ஒரு நகை, ஒரு புடவை, ரஷ்யப் பேரரசு, கோயில் வாகனம், மைசூர் அரசு, ஒரு சாமான்யன் கூறிய கதை, கர்நாடக அரசு, அல்பேனியா நாடு, நான் நேரில் பார்த்த ஒரு சிற்பம் ஆகியவற்றில் ஒரு பொது அம்சம் இருக்கிறது எனக் கூறினால் அதை உங்களால் நம்ப முடியுமா? அந்த பொது அம்சம் என்ன? அது இரு தலைகளையுடைய ஒரு கற்பனைப் பறவை என்று கூறினால் நம்ப முடிகிறதா?

படம் 1  : பெங்களூர் ஆலய தூண் சிற்பம்


 









 



மேலே உள்ள இந்த சிற்பம் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் ஒரு தூணில் உள்ளது. கர்நாடகத்தில் “கண்ட பேருண்டா”(Gandaberunda) எனப்படுகிறது. மற்ற இடங்களில் கண்ட பேருண்டம், கண்ட பேருண்டப் பட்சி(பறவை), இரு தலைப் பறவை, இரு தலைப் புள், இரு தலைக் கழுகு, அண்ட ரெண்ட பட்சி என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியக் கோயில்களில் எத்தனையோ கற்பனை விலங்குகளின் சிற்பங்கள் இருக்கும்போது இதில் என்ன புதுமை என்ற கேள்வி எழுந்தது. புதுமை இந்தச் சிற்பத்தின் அமைப்பிலும், அது நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லும் தகவல்களிலும் உள்ளது.

திங்கள், 5 பிப்ரவரி, 2024

கரிகால் சோழனின் கல்லணையத் தேடி - 1

நான் மேட்டூர் அணையை முதலில் பார்த்தது 1970களில். ஓரு நீளமான, உயரம் குறைவான மெட்டடார் வேனின்(matador van), உள்ளே சிறிய பெஞ்சுகளைப் போட்டு சிறிசுகளை அதில் உட்கார வைத்துப் பள்ளியிலிருந்து மேட்டூர் அணைக்குச் சுற்றுலா கூட்டிக் கொண்டு போனார்கள். அந்தப் பிரமாண்டமான உயரமும், நீளமும் கொண்ட மேட்டூர் அணையைப் பார்த்ததும், அணை என்றால் இப்படித்தான் உயரமாக, நீளமாக இருக்கும் என மனதில் பதிந்து விட்டது.

பிறகு, 1980களில், வீட்டில் கல்லணைக்குக் கூட்டிப் கொண்டு போனார்கள். மேட்டூர் அணையைப் போல உயரமாக, நீளமாக இருக்கும் என எதிர் பார்த்த எனக்கு ஏமாற்றமே. வீட்டில் வேறு, இது ”அந்தக் காலத்திலேயே” கரிகாலச் சோழ மன்னன் “கல்லாலேயே” கட்டியது என்று கூறியிருந்தார்கள். என் கண்களுக்கு சிமெண்ட் பூசி வண்ணம் அடிக்கப் பட்ட 3 பாலங்களும் அதன் கீழ் இருந்த மதகுகளும் மட்டும் தெரிந்தன, கல்லால் கட்டப்பட்ட அணையைக் கண்கள் தேடின. அப்படி எதுவும் தெரியவில்லை. நான் சும்மாவே நிறைய கேள்விகள் கேட்கிறேன் என்று வீட்டில் புகழும், திட்டும் பெற்றிருந்த காலம் அது. பேசாமல் இருந்து விட்டேன். பாவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

சமீபத்தில் ஓரு நம்பகமான “History Trails” என்ற youtube channel-ல் ஒரு பல்லவர் காலத்து ஏரியைப் பின்புலமாக வைத்து, பண்டைய நீர் மேலாண்மையைப் பற்றிய ஒரு காணொளி (1) பார்த்தேன். அதில் திரு. பராந்தக தமிழ்ச்செல்வன், தற்போதுள்ள கல்லணை கரிகாலன் கட்டியது இல்லை என்றார். அப்படியானால் கல்லணை என அழைக்கப் படுகிற இந்த வளாகத்தைக் கட்டியது யார் என்ற என்னுடைய பழைய கேள்வி, விக்கிரமாதித்தன் -வேதாளம் போலத் திரும்பி வந்ததது. அந்த வீடியோவின் கமெண்டில் இதனைப் பிரிட்டிஷார் கட்டினர் என்று கூறியிருந்தார். நான் பார்த்த சிமெண்ட் கட்டமைப்புக்கு இந்தக் கூற்று பொருந்தியது.

திங்கள், 25 செப்டம்பர், 2023

கோயில் பராமரிப்பு

முக்கியமான கோயில்கள் மற்றும் கோயில் மரபு பற்றிய நூல்களில்பாலும் ஏடும் போல கோயில்கள் தகவல்களுடன் கல்வெட்டுக்களின் தகவல்களும் இருக்கும்.  சில சமயம் அந்த கோயிலைக் கட்டிய/விரிவுபடுத்திய/திருப்பணி  செய்த அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார்  செய்த பணிகள் பற்றிய விவரங்களும் காணப்படும்.

சில சமயங்களில்  கோயில் பராமரிப்புக்கு  அரசர்/மந்திரி/புலவர்/அறிஞர்/தனியார் கொடுத்துள்ள தானங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும்.

உதாரணம் :

"சாலிவாகன சக ௵ (அதாவது ஆங்கில வருடம் 1799) க்கு சரியான தாத்ரு ௵ ஆனி ௴11௳ யில் திரு அரசமாநகரத்திலெழுந்தருளியிரா நின்ற ஶ்ரீசோமேஸ்வர சுவாமியின் கார்த்திகைவுச்சவத்துக்காக பென்சன் சராங்கு சதுப்பேரி சபாபதி முதலியார் வைத்த வீடு தற்மம்"

இது அல்சூர் சோமேஸ்வரர்  கோயிலுக்கு தனியார் ஒருவர் ஓரு வீட்டைத் தர்மமாக எழுதி வைத்த கல்வெட்டு.