தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கரிகால் சோழனின் கல்லணையத் தேடி - 2

முதல் பதிவில் , கல்லணை பிரிட்டஷரால் மாற்றப்பட்டு இப்போது அதன் அடிப்பாகம் மட்டுமே நீருக்கடியில் உள்ளது எனப் பார்த்தோம். இந்தப் பதிவில் கல்லணை மற்றும் காவிரி டெல்டா பகுதியில் செய்யப் பட்ட மாற்றங்களையும் அதன் காரணங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது; இது ஆறுகளுக்கு அதிகம் பொருந்தும். ஓடும் ஆற்றில், இந்த நிமிடத்தில் ஒரு இடத்தில் இருக்கும் நீர் அடுத்த நிமிடத்தில் போய்விட்டிருக்கும். புதிய நீர் அதன் இடத்தை நிரப்பும்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பண்டைய காலத்தில் ஆறுகள் வெள்ள நீரை எடுத்து செல்லும் வாகனங்களாகப் பயன்பட்டன. ஏரிகள் ஆற்றின் நீரைச் சேமித்து வைக்கும் பெரிய நீர்த்தேக்கங்கள் ஆகச் செயல்பட்டன.

பின்னர் பிரிட்டிஷ் காலங்களில், ஆறுகளின் குறுக்கே பெரிய தடுப்பணைகள் மற்றும் பெரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் முறைகள் தொடங்கி வலுப்பெற்றன. பின்னர் தொழிற்புரட்சி மாற்றங்கள், தற்போதைய 21ம் நூற்றாண்டு தொழில்நுட்ப புரட்சிக்கானது.

ஒவ்வொரு தலைமுறை செயல்பாடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளன. இருந்தாலும், எங்கும் தேங்கிவிடாமல் ஆற்றைப் போல தொடருவதே வாழ்க்கையின் இயல்பு.

தென்னிந்தியாவில், ஸர் ஆர்தர் தாமஸ் காட்டன்(Sir Arthur Thomas Cotton), என்ற பிரிட்டிஷ் மிலிடரி பொறியாளர், காவிரி டெல்டா பகுதியில் நீர்ப்பாசன மாறுதல்களை ஆரம்பித்து பின்னர் கோதாவரி, கிருஷ்ணா டெல்டா பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றார். இது போலவே வட இந்தியாவிலும் ஸர் ப்ரோபி தாமஸ் காட்லி (Sir Proby Thomas Cautley) என்பவர் யமுனை மற்றும் கங்கை நதிகளில் இது போன்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

ஆர்தர் காட்டனுக்கு முந்தைய தஞ்சாவூர் காவிரி டெல்டா பகுதிகள் எப்படி இருந்தன?

திங்கள், 5 பிப்ரவரி, 2024

கரிகால் சோழனின் கல்லணையத் தேடி - 1

நான் மேட்டூர் அணையை முதலில் பார்த்தது 1970களில். ஓரு நீளமான, உயரம் குறைவான மெட்டடார் வேனின்(matador van), உள்ளே சிறிய பெஞ்சுகளைப் போட்டு சிறிசுகளை அதில் உட்கார வைத்துப் பள்ளியிலிருந்து மேட்டூர் அணைக்குச் சுற்றுலா கூட்டிக் கொண்டு போனார்கள். அந்தப் பிரமாண்டமான உயரமும், நீளமும் கொண்ட மேட்டூர் அணையைப் பார்த்ததும், அணை என்றால் இப்படித்தான் உயரமாக, நீளமாக இருக்கும் என மனதில் பதிந்து விட்டது.

பிறகு, 1980களில், வீட்டில் கல்லணைக்குக் கூட்டிப் கொண்டு போனார்கள். மேட்டூர் அணையைப் போல உயரமாக, நீளமாக இருக்கும் என எதிர் பார்த்த எனக்கு ஏமாற்றமே. வீட்டில் வேறு, இது ”அந்தக் காலத்திலேயே” கரிகாலச் சோழ மன்னன் “கல்லாலேயே” கட்டியது என்று கூறியிருந்தார்கள். என் கண்களுக்கு சிமெண்ட் பூசி வண்ணம் அடிக்கப் பட்ட 3 பாலங்களும் அதன் கீழ் இருந்த மதகுகளும் மட்டும் தெரிந்தன, கல்லால் கட்டப்பட்ட அணையைக் கண்கள் தேடின. அப்படி எதுவும் தெரியவில்லை. நான் சும்மாவே நிறைய கேள்விகள் கேட்கிறேன் என்று வீட்டில் புகழும், திட்டும் பெற்றிருந்த காலம் அது. பேசாமல் இருந்து விட்டேன். பாவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.

சமீபத்தில் ஓரு நம்பகமான “History Trails” என்ற youtube channel-ல் ஒரு பல்லவர் காலத்து ஏரியைப் பின்புலமாக வைத்து, பண்டைய நீர் மேலாண்மையைப் பற்றிய ஒரு காணொளி (1) பார்த்தேன். அதில் திரு. பராந்தக தமிழ்ச்செல்வன், தற்போதுள்ள கல்லணை கரிகாலன் கட்டியது இல்லை என்றார். அப்படியானால் கல்லணை என அழைக்கப் படுகிற இந்த வளாகத்தைக் கட்டியது யார் என்ற என்னுடைய பழைய கேள்வி, விக்கிரமாதித்தன் -வேதாளம் போலத் திரும்பி வந்ததது. அந்த வீடியோவின் கமெண்டில் இதனைப் பிரிட்டிஷார் கட்டினர் என்று கூறியிருந்தார். நான் பார்த்த சிமெண்ட் கட்டமைப்புக்கு இந்தக் கூற்று பொருந்தியது.