தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

சனி, 19 ஜூலை, 2025

பாதாமி சாளுக்கியர் கால சில வியப்புக்கள்


ரிஷப குஞ்சர சிற்பங்களைப் பற்றி தகவல்கள் சேகரிக்கும் போது, அவை முதன் முதலில் பாதாமி சாளுக்கியர் காலத்தில் அய்கொளேயில்(கர்நாடகா) செதுக்கப்பட்டன எனத் தெரிந்து கொண்டேன்.  பாதாமி சாளுக்கியர்களின் ஆட்சி, அவர்களது கட்டடக்கலை, சிறப்புமிக்க பாதாமிக் குடவரைகள், பாதாமி சாளுக்கியர்களின் காலத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் பற்றிய விவரங்கள்,  அவர்களுக்கிடையில் நிகழ்ந்த போர்கள் என விரிவான சித்திரம் கிடைத்தது.  (இந்தப் பதிவுடன் தொடர்புடைய முந்தைய பதிவு - ரிஷப குஞ்சரம் - 2, பல்லவர்களும், பாதாமி(வாதாபி) சாளுக்கியர்களும்)

பாதாமி சாளுக்கியர்களின் கலை படைப்புகளின் உச்சம் எனக் கருதப்படும் பாதாமி, அய்கொளே, பட்டடதக்கல் போன்ற இடங்களில் உள்ள குடவரைகள் மற்றும் கட்டடங்களைப் பற்றி படிக்கையில் ஒரு சில அம்சங்கள் வியப்பாக இருந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்.

கூரை அமைப்புகள்


பெரும்பாலான பழைய கற்கட்டடங்களின் கூரைகள் சமதளத்துடன் இருப்பதையே பார்த்துள்ளேன்.  முன்பெல்லாம் கோயில் மண்டபங்களுக்குள் நடக்கையில் மேலே சென்று   கற்பலகைகளை எப்படி வைத்து கூரைகள்  அமைத்துள்ளார்கள் என்றும் எப்படி மழை நீர் உள்ளே வராதபடி அமைத்துள்ளனர் எனப் பார்க்கும் ஆவல் இருந்தது.

முதன் முதலில்,  கற்கட்டடங்களின் கூரைகள் சரிவாக அமைந்திருப்பதைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்டவைகள் பாதமி, அய்கொளே மற்றும் பட்டதகல்லில்(கர்நாடக மாநிலம்) அதிகம் காணப்படுகின்றன.

புதன், 30 ஏப்ரல், 2025

அஜந்தா – எல்லோரா குடவரைகள் - பௌத்த தெய்வங்கள்



1. அறிமுகம்

புத்தரைப் பற்றி எனக்குத் தெரிந்தது மிகக் குறைவானதே. பௌத்த மதம் என்றாலே புத்தர் மட்டும்தான் மற்றும் அதன் முக்கியமான அம்சம் தியானம் என்பதே என் புரிதலாக இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது, போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர் மற்றும் பல புதிய பெயர்கள் வந்தன. அவை பற்றி இணையத்தில் தேடும் போது, இன்னும் அதிக கேள்விகளே எழுந்தன.

இந்து மரபில் பல தெய்வங்களின் வழிபாடு  இருப்பது போல, பௌத்தத்திலும் நிறைய ஆண், பெண் தெய்வங்கள், யக்‌ஷர்கள், யக்ஷிகள், கணங்கள், மிதுனர்கள், வித்யாதரர்கள் இருக்கின்றனர் எனத் தெரிந்து கொண்டபோது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

எங்கள் அஜந்தா எல்லோரா பயணம் பற்றி, ஆலயக்கலை ஆசிரியர் ஜெயகுமார் நடத்திய இணைய வழி அறிமுக வகுப்பு, பௌத்த மதத்தைப் பற்றிய வரலாறு, பண்பாடு மற்றும் நிறைய புரிதல்களைக் கொடுத்தது. 

வெள்ளி, 14 மார்ச், 2025

எல்லோரா – இந்துக் குடவரைகள்

 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறிய பற்பல எரிமலைகள்; அவற்றிலிருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்புகள் உருகி ஓடி குளிர்ந்து ஏற்படுத்திய பள்ளங்கள்; இப் பெரு நிகழ்வுகளின் சான்றுகளாக, வெவ்வேறு குன்றுகளும், மலைகளும், மலைத்தொடர்களும், அவற்றிலிருந்து விழும் அருவிகளும், ஓடிவரும் ஓடைகளும், நதிகளும், இவற்றையெல்லாம் இணைக்கும் பள்ளத்தாக்குகளுமாக அந்த நிலப்பரப்பு காட்சியளிக்கிறது. நாங்கள் சென்ற பிப்ரவரி(2025) மாதத்தில்,  குளிரில்லை, அதிக வெப்பமுமில்லை. ஆனால், செடிகள் காய்ந்து, பெரும்பாலும் வறண்டு சில இடங்களில் மட்டுமே பசுமையாகத் தென்பட்டது.  மழைக்காலங்களில் இது முற்றிலும் வேறாக ஈரத்துடன், பசுமையுடனும் காட்சியளிக்கும் எனத் தோன்றுகிறது.  

சத்ரபதி சாம்பாஜி நகரிலிருந்து (பழைய பெயர் ஔரங்காபாத்) எல்லோராவுக்குப் போகும் வழியில் தென்படும் ஆல மரங்களும், வேப்ப மரங்களும் புதிய நிலப்பரப்பை பார்த்த திகைப்பிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்துகிறது.

எல்லோராவில் 100க்கு மேற்பட்ட குடவரைகள் இருக்கின்றன தொல்லியல்துறை, 34 குடவரைகளை நாம் பார்க்க வசதி செய்துள்ளது.

இங்கு

13 பௌத்த குடவரைகள் (எண் 1-13),

16 இந்து குடவரைகள் (எண்14-29),

5 சமணக் குடவரைகள் (எண் 30-34) உள்ளன.

இவைகள் ஓரு பெரிய மலை அல்லது மலைத்தொடரின் சரிவில் 2கிமீ க்கும் மேலான நீளத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில் (குடவரை எண் 16), இயற்கையின் வல்லமையை வெல்ல முயன்ற மனிதனின் கலைமனத்துக்குப் கிடைத்த மாபெரும் வெற்றி. முதலில் நமக்குத் தென்படுவது, ஒரு இரண்டு நிலை குடவரைக் கோபுரம். சற்று இருண்ட, நீளமான நுழைவாயிலைக் கடந்து சென்றால், ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் செல்லும் போது திடீரென்று மேலே ஆகாயம் திறந்து, வெளிச்சமும், காற்றும், வெப்பமும் நம்மை வருடும் ஒரு பரவசம், இங்கேயும் கிடைக்கிறது. ஒரு வித்தியாசம், இந்த திறந்த வெளி, இயற்கையானது அல்ல. நம் முன்னோர்கள், அங்கிருந்த பாறைகளை அகற்றி எற்படுத்தியது!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய கைலாசநாதர் கோயில், குடவரைக் கலையின் உச்சம் எனலாம். பொதுவாக ஒரு மலையை உட்புறமாக குடைந்து தூண்கள், மண்டபங்கள், கருவறைகள், சிற்பங்கள் என அமைப்பது வழக்கம். இத்தகைய குடைவரையின் மூன்று பக்கங்களும் பாறைகளால் தடுக்கப் பட்டிருக்கும். முன்பக்கம் வழியாகவே வெளிச்சமும், காற்றும், நாமும் சென்று வரமுடியும். உதாரணம், மண்டகப்பட்டிலுள்ள மகேந்திரவர்ம பல்லவனின் முதல் குடவரை.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அஜந்தா சுவரோவிய தொகுப்புகளைப் புரிந்து கொள்ளல் – ஓரு முயற்சி

 படங்கள் பார்ப்பது என்பது பள்ளிப்பாட புத்தகங்களில் ஆரம்பித்து, நம்மைச் சுற்றி கண்ணில்படும் ஆலயங்கள் மற்றும் காலண்டர் ஓவியங்கள் வரை நமக்கும் பரிச்சயமானதே.  இதனால், அஜந்தா ஓவியங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் என நினைத்தால், நமக்குப் பரிச்சயமான புத்தர் ஓவியங்களைத் தவிர்த்து மற்றவைகளை உள்வாங்கிக் கொள்வது சற்று கடினமாகவேயிருக்கும்.  பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. சில ஆயத்தங்கள் மூலம் அதையும் எளிமைப் படுத்திக் கொள்ளலாம்.    அஜந்தா ஓவியத் தொகுப்புகளை முதன் முறையாகப் பார்க்கும்போது, அதில் பயிற்சி இல்லாத நான் அடைந்த தடுமாற்றம் போல மற்றவர்களும் அடைய வாய்ப்புள்ளது.

ஆதி நாட்களில் கதைகள், தொன்மங்கள், நிகழ்வுகள் எல்லாம் வாய் வழியாகவும், ஏடுகள் வழியாகவும் பகிரப்பட்டது. பாதுகாக்கப்பட்டது!

இதன் அடுத்த படியாக, காட்சி ஊடகம் பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவது ஒரு ன் அதிர்ச்சியே!  இதற்கு மிகச் சிறந்த உதாரணம்   ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முந்திய அஜந்தா சுவரோவியங்களே!  இவை புத்தர் காலத்து நிகழ்வுகளை, அவரது முந்தைய பிறப்புகளைச் சார்ந்த ஜாதகக் கதைகளை, தொன்மங்களை ஒரு ஓவியத் தொகுப்பாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஓருவகையில் தற்கால story boardன் முன்னோடி எனவும் கொள்ளலாம்.