தமிழ் ஆங்கிலப் பக்கங்கள்

செவ்வாய், 26 மார்ச், 2024

சிற்பத்தில் அசைவுகள் - 1

குரங்குகள் குட்டிக்கரணம் அடிப்பது சதாரணம். குரங்குகள் குட்டிக்கரணம் அடிப்பதை கற்சிற்பமாக வடிப்பது அசாதரணமே!

சில சமயங்களில் கோயில்களில் மிக வினோதமான சிற்பங்கள் கண்ணில் படுவதுண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவற்றை உருவாக்கிய சிற்பியின் குறும்புத்தனமும், படைப்பாற்றலும் அதன் மூலம் அவர் நமக்கு விடும் சவால்களும் வியப்பானவை.

அப்படிப்பட்ட சில சிற்பங்களை நான் பெங்களூரில் உள்ள அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் பார்த்தேன். அவை எனது மூளைக்கு நிறைய வேலை கொடுத்தன.















கோயில் மண்டபத்தின் ஒரு தூணின் மேல் பகுதியில் இந்தச் சிற்பத்தை புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதைப் புகைப்படம் எடுத்து பெரிதுபடுத்திப் பார்த்தேன்.



















இது ஒரு உடலுடன் மூன்று தலைகள் கொண்ட ஒரு அழகிய கற்பனைப் பறவை என இதனை நாம் எளிதில் கடந்து போகலாம்.

இதில் தான் அந்த சிற்பி நமக்கு விடும் சவால் உள்ளது.

கொஞ்சம் யோசித்தால், மூன்று பறவைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க, அவற்றின் கழுத்துப் பகுதி மட்டும் வெவ்வேறு நிலைகளில் உள்ளன எனவும் நாம் கருதலாம். பரத நாட்டிய நிகழ்ச்சிகளில், எட்டு கைகள் உள்ள காளி அல்லது மகிஷாச மர்த்தினியை நான்கு நடன மங்கைகள் ஒருவர் பின் ஒருவாக நின்று உருவாக்குவது போல!

இன்னும் கொஞ்சம் யோசித்தால், சிற்பி ஒரே பறவையின் அசைவுகளை ஒரே சிற்பத்தில் கொடுத்துள்ளாரோ எனவும் தோன்றுகிறது. அதைப் புரிந்து கொள்ள கணிணியின் உதவியுடன் முயற்சித்தேன். அந்த உருவாக்கம் மிக சுவராஸ்யமாகவே இருந்தது!

கீழே குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறது.



















தலையை உயர்த்தி தூரத்தில் எதையோ பார்க்கிறது.



















நிறைய வேலை செய்த களைப்பில்(!), ஒய்வு எடுக்க
முடிவெடுத்து, தலையை அதன் தலையணையான
முதுகில் சாய்த்து ஓய்வு எடுக்கிறது!





















இதுவரை கோயில்களில் புராண நிகழ்ச்சிகளை சிற்பி அருகருகே உள்ள ஒரு சில சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தியதைப் பார்த்து இருக்கிறேன். இங்கு அதன் அடுத்த கட்ட நூதன முயற்சியாக, ஒரே சிற்பத்தில் மூன்று அசைவுகளை வெளிப்படுத்தும் விதம் அருமையாக உள்ளது.

கணிணியின் உதவியோடு அந்த அசைவுகளைப் பார்க்க முயற்சி செய்துள்ளேன்!


இதைப் போன்ற இன்னும் ஒரு சிற்பம், அதே கோயிலின் நுழைவாயில் நிலைக்காலில் இருந்தது ஆச்சரியமே!






















இப்போது கொஞ்சம் கடினமான சவால்.

இரண்டு தலைகள்,  நான்கு உடல்கள்! 




















இந்த சிற்பம் வேறு ஒரு தூணின் மேற்பகுதியில்!

ஓரே சிற்பத்தில் நான்கு குரங்குகளா? அல்லது, ஒரு குரங்கு குட்டிக்கரணம் போடும் நான்கு அசைவுகள் காட்டப் பட்டுள்ளதா? இதில் அந்தக் குரங்கு கையில் எதையோ வைத்துக் கொண்டு வாயில் இட்டுத் தின்ன முயற்சிக்கிறதா? ஒரு வேளை ஏதோ சப்தம் கேட்டு பயத்தில் தடுமாறி குட்டிக் கரணம் அடித்துள்ளதா? அல்லது அந்த தின்பண்டத்துக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் குதித்து சண்டையிடும் அசைவைக் காட்டுகிறதா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

கணிணியின் உதவியோடு அந்த அசைவுகளைப் பார்க்க முயற்சி செய்துள்ளேன்!





முடிவாக ஒரு மிகக் கடினமான சவால் ஒன்று.





















அரிதான எவையும் உயரமான இடத்தை அடையும் என்பது போல, இந்தச் சிற்பமும் ஒரு தூணின் உயரமான மேல் பகுதியில் இருக்கிறது. நேரில் அண்ணாந்து பார்க்கும் போது இது என்ன என்று சுலபமாகப் புரியவில்லை. புகைப் படத்தைப் பார்ப்பது சற்று வசதியாக உள்ளது.




















எத்தனை மனிதர்கள்? கை, கால்கள் எங்குள்ளன? ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் தலையை பிய்த்துக் கொண்டபின் புதிர்கள் அவிழ்ந்து தெளிவு கிடைத்தது.




















இதில் இரண்டு கழைக்கூத்தாடிகள் (Gymnasts!) உள்ளனர். அவர்களது கால்கள் விரிந்துள்ளன. ஓரு சக்கரம் போல சுழலுவதற்கு வசதியாக முதல் நபரின் கால்களை இரண்டாம் நபர் கைகளால் பற்றியுள்ளார், இரண்டாம் நபரின் கால்களை முதலாம் நபர் கைகளால் பற்றியுள்ளார். இந்தச் சிக்கலான பிணைப்பை, சிற்பி மிகச் சாமர்த்தியமாக கல்லில் வடித்துள்ளார். கல் சிற்பத்தின் மூலமாகவும் அசைவை வெளிப்படுத்தும் இன்னும் ஒரு அருமையான படைப்பு!

கணிணியின் மூலமாக அவர்களது அசைவுக்கு உயிர் கொடுக்க முயற்சித்துள்ளேன்.






Photo credit: Sudeesh Kottikkal youtube channel


















இந்தக் குரங்குகளின்  சிற்பம் மேல்கோட்டை செலுவ நாராயண சுவாமி (Melkote Cheluvanarayana Swamy Temple, Karanataka) கோயிலில் உள்ளது. மேலும் இன்னொரு தூணில், ஓரே பசுவின் உடலை பயன்படுத்தி, அது கன்றுக்குப் பால் கொடுத்தல், நீர் அருந்துதல், தலையை நிமிர்த்திப் பார்த்தல் என்னும் மூன்று காட்சிகளை காட்டும் சிற்பம் உள்ளது. இதைப் போன்ற பிற சிற்பங்களும் அங்குள்ளன. இந்த ஆலயம் ஹொய்சாளர்களால் கட்டப் பட்டது/விரிவுபடுத்தப் பட்டது என நம்பப் படுகிறது. அல்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயமும் ஹொய்சாளர்களால் விரிவுபடுத்தப் பட்டது . ஒரு வேளை ஹொய்சாளர்கள் காலத்து சிற்பிகள் இத்தைகைய புதிர்ச் சிற்பங்களை வடிப்பதில் சிறந்து விளங்கினார்கள் போலும்! தென்னிந்தியாவில் மற்ற கோயில்களிலும் இத்தகைய சிறப்புச் சிற்பங்கள் உள்ளன. வேறு பகுதிகளிலும் இப்படிப் பட்ட சிற்பங்களை நம் முன்னோர்கள் வடித்திருக்க வாய்ப்புண்டு.

நவீன கால கல்வியாளர்களும், உளவியலாளர்களும் நம்முடைய படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள, “out of box thinking” என்னும் ஒரு யுக்தியை பலமாக பரிந்துரைக்கின்றனர். நம் முன்னோர்கள் வெகு பல நூறாண்டுகளுக்கு முன்னரே படைப்பாற்றலில் சிறந்து விளங்கியுள்ளனர். கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. அவற்றில் உள்ள கலைச் செல்வங்கள் நமக்கு எத்தனையோ வாழ்க்கை பாடங்களை தரக் காத்திருக்கின்றன. நாம்தான் அவற்றை கண் திறந்து பார்க்க வேண்டும், மனம் திறந்து உணர வேண்டும்!