படங்கள் பார்ப்பது என்பது பள்ளிப்பாட புத்தகங்களில் ஆரம்பித்து, நம்மைச் சுற்றி கண்ணில்படும் ஆலயங்கள் மற்றும் காலண்டர் ஓவியங்கள் வரை நமக்கும் பரிச்சயமானதே. இதனால், அஜந்தா ஓவியங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் என நினைத்தால், நமக்குப் பரிச்சயமான புத்தர் ஓவியங்களைத் தவிர்த்து மற்றவைகளை உள்வாங்கிக் கொள்வது சற்று கடினமாகவேயிருக்கும். பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. சில ஆயத்தங்கள் மூலம் அதையும் எளிமைப் படுத்திக் கொள்ளலாம். அஜந்தா ஓவியத் தொகுப்புகளை முதன் முறையாகப் பார்க்கும்போது, அதில் பயிற்சி இல்லாத நான் அடைந்த தடுமாற்றம் போல மற்றவர்களும் அடைய வாய்ப்புள்ளது.
ஆதி நாட்களில் கதைகள், தொன்மங்கள், நிகழ்வுகள் எல்லாம் வாய் வழியாகவும், ஏடுகள் வழியாகவும் பகிரப்பட்டது. பாதுகாக்கப்பட்டது!
இதன் அடுத்த படியாக, காட்சி ஊடகம் பண்டைக்காலத்தில்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவது ஒரு இன்ப அதிர்ச்சியே! இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஏறத்தாழ 1500 வருடங்களுக்கு முந்திய அஜந்தா சுவரோவியங்களே! இவை புத்தர் காலத்து நிகழ்வுகளை, அவரது முந்தைய
பிறப்புகளைச் சார்ந்த ஜாதகக் கதைகளை, தொன்மங்களை ஒரு ஓவியத் தொகுப்பாக நம் கண்முன்
கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஓருவகையில்
தற்கால story boardன் முன்னோடி எனவும் கொள்ளலாம்.